சந்திரனில் ஆய்வு நடத்த முதல் முறையாக விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்!

  தினகரன்
சந்திரனில் ஆய்வு நடத்த முதல் முறையாக விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்!

ஜெருசலேம் : சந்திரனில் ஆய்வு நடத்த முதல் முறையாக இஸ்ரேல் விண்கலம் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன. அவற்றில் சீனா கடந்த ஜனவரி 3ம் தேதி சந்திரனின் பின்புறத்தில் விண்கலத்தை இறக்கி ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் இஸ்ரேல் முதன் முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறது. இந்திய நேரப்படி வரும் 22ம் தேதி மதியம் 1.45 மணிக்கு, பெரிஷீட் எனப்படும் 585 கிலோ எடை கொண்ட விண்கலம் அனுப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதாக இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் அருகேயுள்ள யெகுட் நகரில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய இஸ்ரேல் விண்வெளி நிறுவன தலைவர் மோரிஸ்கான், சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புவதால் எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது என்று கூறியுள்ளார். நாசாவுடன் இணைந்து இந்த விண்கலத்தை அனுப்பு உள்ளதாகவும், இந்த விண்கலத்தில் வீரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை என்றும் தகவல் அளித்துள்ளார்.

மூலக்கதை