வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல்

  தினத்தந்தி
வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல்

வயநாடு,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்தது. இந்த நிலையில், வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டது.பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும் போட்டியிடுகிறார். இதனிடையே, நாளை ( புதன்கிழமை) பிரியங்கா காந்தி வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி கல்பெட்டாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் முன்பு வரை ரோடு ஷோ (வாகன அணிவகுப்பு) நடைபெறுகிறது. இதில் பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்கள்.

மூலக்கதை