கத்திக்குத்திலிருந்து பயணிகளைத் தற்காக்கும் குடை

  தமிழ் முரசு
கத்திக்குத்திலிருந்து பயணிகளைத் தற்காக்கும் குடை

ஒசாக்கா: ஜப்பானிய ரயில்வே நிறுவனமான ‘ஜேஆர் வெஸ்ட்’, ரயிலுக்குள் பயணிகளையும் ரயில் சிப்பந்திகளையும் கத்திக்குத்துத் தாக்குதலிலிருந்து தற்காக்கும் புதிய குடையை வடிவமைத்துள்ளது.நவம்பர் மாதத்திலிருந்து கிங்கி வட்டாரத்தில் சேவை வழங்கும் கிட்டத்தட்ட 600 ரயில்களில் இந்தக் குடைகளை வைக்கப்போவதாக நிறுவனம் கூறியது.ஒவ்வொரு ரயிலிலும் சிப்பந்திகள் பகுதியில் இரண்டு குடைகள் இருக்கும்.ஒவ்வொரு குடையும் ஒரு மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. விரித்தால் அதன் விட்டம் 1.1 மீட்டர் இருக்கும். கத்தி, பிளேடு போன்ற கூரான ஆயுதங்களால் கிழிக்கமுடியாத பொருளில் அது தயாரிக்கப்பட்டுள்ளது.அதை விரித்துப் பிடித்தால், பிடித்திருப்பவர் கத்திக்குத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியும்.குடையின் எடை கிட்டத்தட்ட 700 கிராம் எனக் கூறப்பட்டது. ஒப்புநோக்க இரும்புக் கவசங்கள் போன்ற இதர பாதுகாப்புக் கருவிகளைவிட இது எடை குறைவானது.வலை போன்ற பொருளில் தயாரிக்கப்பட்டிருப்பதால் இந்தக் குடையைப் பிடித்திருப்பவர் தாக்குதல்காரரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க இயலும். ஜேஆர் கன்சாய் விமான நிலையப் பாதையில் சேவை வழங்கும் ரயிலில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாக்குதல்காரர் ஒருவர், இரண்டு பயணிகள் உட்பட மூவரைக் கத்தியால் குத்தியதை அடுத்து ரயில் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.கத்திக்குத்திலிருந்து பாதுகாக்கும் கவசங்கள், அங்கிகள், கையுறைகள் போன்ற கருவிகளை அது ரயில்களில் வைத்துள்ளது. இந்த வரிசையில் புதிய குடையும் இணைந்துள்ளது.

மூலக்கதை