சீனா: சர்ச்சைக்குரிய எல்லைப் பிரச்சினைகளில் இந்தியாவுடன் ‘தீர்மானம்’ எட்டப்பட்டது

  தமிழ் முரசு
சீனா: சர்ச்சைக்குரிய எல்லைப் பிரச்சினைகளில் இந்தியாவுடன் ‘தீர்மானம்’ எட்டப்பட்டது

பெய்ஜிங்: இரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பிரச்சினைகளில் இந்தியாவுடன் தீர்வு காணப்பட்டுள்ளதாக அக்டோபர் 22ஆம் தேதியன்று சீனா அறிவித்தது.எல்லையில் ராணுவ சுற்றுக் காவலில் பெய்ஜிங்குடன் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்ததையடுத்து சீனாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.“சீனா-இந்தியா எல்லைப் பிரச்சினை தொடர்பில் அரசதந்திர, ராணுவ மட்டத்தில் சீனாவும் இந்தியாவும் நெருக்கமாக அண்மையில் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தன. தற்போது இந்த விவகாரத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது,” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் வழக்கமான விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.உலகின் ஆக அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவும் இந்தியாவும் பரம வைரிகளாக இருந்து வருகின்றன. எல்லைப் பிரச்சினையில் ஒன்றையொன்று குற்றம் சாட்டி வருகின்றன. 2020ல் எல்லையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள், நான்கு சீன வீரர்கள் உயிரிழந்தனர். இந்த மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் தங்களுடைய ஆயிரக்கணக்கான வீரர்களை மீட்டுக் கொண்டன. பின்னர் சுற்றுக் காவலுக்கு வீரர்களை அனுப்பப்போவதில்லை என்று இரு நாடுகளும் முடிவு செய்தன.அடுத்த கட்டமாக இந்தியாவுடன் சேர்ந்து தீர்மானத்தை நிறைவேற்ற செயல்படுவோம் என்று திரு லின் தெரிவித்தார். இந்தத் தீர்வால் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டையொட்டி சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அதிகாரபூர்வமாக சந்தித்துப் பேச வழி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து திரு லின் தெரிவிக்கவில்லை.இதற்கிடையே சீன எல்லையில் இந்தியப் படைகள் விலக்கிக் கொள்ளப்படுவது எப்போது என்பதற்கு இந்திய ராணுவத் தளபதி விளக்கம் அளித்துள்ளார்.2020ல் இருந்த நிலைக்குத் திரும்பிய பிறகே சீன எல்லையை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ள நமது படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த திரு உபேந்திரா திவேதி, “ஏப்ரல் 2020க்கு முன் இருந்த நிலைக்கு தற்போதைய நிலைமையை மாற்ற விரும்புகிறோம். அதன்பிறகே, படை விலகல் குறித்து நாங்கள் ஆராய்வோம். ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்ப்பதற்கான நம்பிக்கையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது நம்பிக்கை கட்டியெழுப்பப்படுவதை நாங்கள் பார்ப்போம்” என்றார்.முன்னதாக, திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய - சீன எல்லையில் ரோந்துப் பணி ஏற்பாடுகள் தொடர்பாக இரு நாடுகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மூலக்கதை