2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்ற இலங்கை - கொண்டாடும் சுற்றுலா துறை - லங்காசிறி நியூஸ்
இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.2024 ஆம் ஆண்டிற்கான இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கொண்டாடுவதற்குத் தயாராக இருப்பதாக இலங்கை சுற்றுலா அமைச்சு இன்று (டிசம்பர் 26) அறிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இந்த மைல்கல்லை நினைவுகூரும் வகையில் விசேட விழாவொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.டிசம்பர் 22 ஆம் திகதிக்குள், ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1,966,256 சர்வதேச பார்வையாளர்களை இலங்கை வரவேற்றுள்ளது.டிசம்பரில் மட்டும் 161,383 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இந்தியா அதிகபட்சமாக 35,131 வருகை தந்துள்ளது. மேலும் டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவிலிருந்து 22,637 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,822 பேரும், ஜேர்மனியிலிருந்து 9,998 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,646 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர். 2024 முழுவதும் 399,224 பார்வையாளர்களுடன் இந்தியா முதன்மையான மூல சந்தையாக இருந்தது, அதைத் தொடர்ந்து 189,289 பார்வையாளர்களுடன் ரஷ்யா உள்ளது.பிரித்தானியா 172,404 சுற்றுலாப் பயணிகளை அனுப்பியது, ஜெர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ் முறையே 131,379, 120,268 மற்றும் 86,440 சுற்றுலாப் பயணிகளை அனுப்பியுள்ளன.இந்த வருட இறுதிக்குள் 2.1 மில்லியன் வெளிநாட்டு வருகையாளர்களை விஞ்சும் பாதையில் இலங்கை இருப்பதாகவும் பேராசிரியர் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.