ரஞ்சி கோப்பை: ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் விராட் கோலி
புதுடெல்லி, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையின் அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளன. இதில் முன்னணி வீரர்களான ரோகித், ஜடேஜா, சிராஜ், பண்ட் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாட உள்ளனர். சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி கண்டது. இதில் ரோகித் சர்மா, விராட்கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இதன் காரணமாக ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து உடல் தகுதி பிரச்சினை இல்லாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது. இதனால் உள்ளூர் போட்டிகளில் முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர். இதில் நட்சத்திர வீரரான விராட் கோலி, கழுத்து வலி காரணமாக 23-ம் தேதி தொடங்கும் டெல்லி அணியின் சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் மீது சிலர் குறை கூறினர். இந்நிலையில் டெல்லி அணியின் அடுத்த லீக் ஆட்டத்தில் (30-ந்தேதி ரெயில்வே அணிக்கு எதிராக) விளையாட தயாராக இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனை டெல்லி அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. விராட் கோலி கடைசியாக 2012-ம் ஆண்டு உத்திரபிரதேசத்துக்கு எதிராக ரஞ்சி போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு தற்போதுதான் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.