பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாக இழப்பீடு: அமைச்சர் அறிவுறுத்தல்
சென்னை,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் 2024-2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு விரைவாக இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்து காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் 2024-ம் ஆண்டுக்கான குறுவை நெல் காப்பீடு மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்கிய விபரம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பயிர் காப்பீட்டு அறிவிக்கை செய்யப்பட்ட ஜூலை மாதம் 31-ம் தேதி வரை சுமார் 1.77 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யும் 69,495 விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. திட்ட விதிமுறைகளின்படி அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் பயிர் அறுவடை பரிசோதனைகள் நவம்பர் 20-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, புள்ளியியல் மற்றும் பொருளியியல் துறையால் அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களின் குறுவை நெல் மகசூல் விபரம் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று இறுதி செய்யப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி அன்று மத்திய அரசின் தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் முழுவதுமாக பதிவேற்றம் செய்யப்பட்டது.மாநில அரசால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தேசிய பயிர் காப்பீட்டு வலைதளம் மூலம் ஜனவரி10, 2025 முதல் திட்ட விதிமுறைகளின்படி இழப்பீட்டுத் தொகை 6 காப்பீட்டு நிறுவனங்களான, இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனம், எச்.டி.எப்.சி. எர்கோ பொது காப்பீட்டு நிறுவனம், யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனம், எஸ்.பி.ஐ. பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஷேமா காப்பீட்டு நிறுவனங்களால் ரூ. 43 கோடி இழப்பீட்டுத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு குறுவை பயிர் காப்பீடு செய்த 29,382 விவசாய பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் முதன்முறையாக பொங்கல் பண்டிகைக்குள் நேரிடையாக வரவு வைக்கப்பட்டது. இதில், 130 சதவீதத்திற்கு மேல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையினை மாநில அரசும் மத்திய அரசும் சரிசமமாக பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு அரசு குறுவை பருவத்திற்கு மகசூல் பதிவேற்றம் செய்தவுடன் இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறச் செய்தது இவ்வரசின் மேலும் ஒரு சாதனை நிகழ்வாகும். இக்கூட்டத்தில் குறுவைப் பருவத்திற்கு ரூ.24.69 கோடி பிரிமீயத் தொகையாக பெறப்பட்டது எனவும் இழப்பீட்டுத் தொகையாக ரூ.43.29 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் பிரிமீயத் தொகையை ஒப்பிடுகையில் இழப்பீட்டுத் தொகை 175 சதவீதம் அதிகம் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் பெற்று தரப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் ஷேமா பொது காப்பீட்டு நிறுவனம் ஏற்கனவே விதைப்பு செய்ய இயலாமை இனத்திற்கு நாகப்பட்டினம், திருவாரூர் மற்றம் தஞ்சாவூர் (பகுதி) மாவட்டங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.23.859 கோடி சுமார் 3,394 விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்தது போக மகசூல் அடிப்படையில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் (பகுதி), கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், தேனி, திருச்சி மற்றம் வேலூர் மாவட்டங்களுக்கு ஜனவரி 25-ம் தேதிக்குள் இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதில் எந்தவித காலதாமதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் தவறும் பட்சத்தில் இந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கான காப்பீடு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெற்றது. எனினும் அச்சமயம் ஏற்பட்ட மழையினால் தேசிய பயிர்காப்பீட்டு வலைதளத்தில் பதிவு செய்ய இயலாத விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு அரசு நவம்பர் 30-ம் தேதி வரை காப்பீடு செய்ய காலநீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. இதன்படி 18.52 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் பரப்பளவு சுமார் 8.06 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது. இதில் 3.03 லட்சம் ஏக்கர் பரப்பளவு சுமார் 2.29 லட்சம் விவசாயிகளால் நீட்டிக்கப்பட்ட காலத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் பெஞ்சல் புயல், வடகிழக்கு பருவ மழை மற்றும் பருவம் தவறிய மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், செங்கல்பட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம், காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், திருப்பத்தூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சம்பா நெற்பயிருக்கான மகசூல் கணக்கிட திட்ட விதிமுறைகளின்படி அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் நான்கு பயிர் அறுவடை பரிசோதனைகள் நடத்தப்பட்டு இழப்பீட்டுத் தொகை கணக்கிடப்படுகிறது. இதன்படி நடப்பு சம்பா பருவத்திற்கு 40,165 பயிர் அறுவடை பரிசோதனைகள் திட்டமிடப்பட்டு இதுவரை 6,383 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மீதம் 33,785 பயிர் அறுவடை பரிசோதனைகளை விரைவில் நடத்தி வழக்கமாக ஜூன் மாதத்தில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 2025 மார்ச் மாதத்திற்குள்ளாகவே விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில் புயல் / மழை / வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களுக்கான பயிர் அறுவடை பரிசோதனைகளை நடத்தும் காலக்கெடு மறுநிர்ணயம் (Re-Schedule) உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட புயல் / மழை / வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களுக்கான நான்கு பயிர் அறுவடை பரிசோதனைகளும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.மகசூல் விபரங்கள் மாவட்டம் வாரியாக புள்ளியியல் துறையால் விரைவாக இறுதி செய்யப்பட்டு தேசிய பயிர் காப்பீட்டு வலைத்தளத்தில் பதிவேற்றம் காலதாமதமின்றி உடனடியாக செய்யப்பட வேண்டும். மகசூல் விபரங்கள் பதிவேற்றம் செய்த ஒரு வார காலத்திற்குள் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை ஒப்பளிப்பு செய்து விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்திட வேண்டும்.திட்ட விதிமுறைகளின்படி மகசூல் கணக்கிட நடத்தப்படும் பயிர் அறுவடை பரிசோதனைகள் முறையாக முடிக்கப்பட்டு, மகசூல் விவரம் வழங்கப்பட்ட பின்னரே காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை வழங்க இயலும் என்பதால், மேற்கண்ட கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டவாறு 40,165 பயிர் அறுவடை பரிசோதனைகள் விரைவாக நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கும், பயிர் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.