ராணிப்பேட்டையில் அமைய உள்ள லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி
சென்னை:இந்தியாவில் பிரீமியம் வகை கார்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டிலேயே ஜாகுவார் லேண்ட்ரோவர் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ராணிப்பேட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்டு 190 ஹெக்டேர் பரப்பளவில் தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இது தொடர்பாக ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கார் தொழிற்சாலையை அமைக்க ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இப்போது முதல்கட்டமாக ரூ.914 கோடியில் தொழிற்சாலைக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு ஜாகுவார் லேண்ட்ரோவர் வகை கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இருந்தார். இதைத் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பித்தது.இந்த நிலையில், ராணிப்பேட்டையில் அமைய உள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. முதல் கட்டமாக 914 கோடியில் தொழிற்சாலை அமைய உள்ளது. 190 ஹெக்டேரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் முதல் கட்டமாக 1,650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதிய ஆலையில் ஆண்டு உற்பத்தி திறன் 2.5 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் இருக்கும் என்றும், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் உற்பத்தி இலக்கும் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆலை அடுத்த தலைமுறை சொகுசு பிரீமிம் கார்கள் மற்றும் புதிய மின்சார வாகனங்களின் உற்பத்திக்கான மையமாக செயல்படும் என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.