அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியில்தான் பேச வேண்டும் - மராட்டியத்தில் அதிரடி
மும்பை,மராட்டியத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு கழகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்களில் மராத்தியை கட்டாயமாக்கி மாநில அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. அதில் அரசு ஊழியர்கள், அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் மராத்தியில் தான் கட்டாயம் பேசவேண்டும் என கூறப்பட்டுள்ளது. வெளிமாநிலம், வெளிநாட்டினரிடம் மட்டும் மராத்தியை தவிர்த்து வேறு மொழியில் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுதவிர அரசு அலுவலகங்களில் உள்ள கணினிகளில் மராத்தி தட்டச்சு செய்யும் வகையில் வசதி செய்து இருக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில மராத்தி மொழி கொள்கை பரிந்துரைப்படி இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.அரசு அலுவலகங்களில் மராத்தியில் பேசாத ஊழியர்கள், அதிகாரிகள் குறித்து குறிப்பிட்ட அலுவலக தலைமை அதிகாரி அல்லது அந்த துறை தலைமை அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முடியும். ஊழியர்கள் மீது வரும் புகார்கள் குறித்து விசாரித்து உண்மை இருந்தால், அந்த ஊழியர் மீது துறை தலைமை அதிகாரி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார். மராத்தியை பாதுகாக்கவும், விளம்பரப்படுத்தவும், மேம்படுத்தவும், பரப்பவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.