தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சட்ட விரோதிகளின் ஆட்சியா? - ஓ. பன்னீர்செல்வம் கேள்வி

  தினத்தந்தி
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சட்ட விரோதிகளின் ஆட்சியா?  ஓ. பன்னீர்செல்வம் கேள்வி

சென்னை,தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-சாராய வியாபாரிகள், கொலையாளிகள், கொள்ளைக்காரர்கள், பாலியல் பலாத்காரம் செய்வோர், போதைப் பொருள் விற்பனை செய்வோர், மணல் கடத்தல்காரர்கள் என சட்ட விரோதிகளின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்குப் பதிலாக சட்ட விரோதிகளின் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் சாராய விற்பனை செய்து வந்ததாகவும், இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும், மேற்படி மூவரில் ராஜ்குமார் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளி வந்ததாகவும், வெளியே வந்தவுடன் அதே சாராய விற்பனையை தொடர்ந்ததாகவும், இதனைத் தட்டிக் கேட்ட சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாகவும், இதனைத் தட்டிக் கேட்ட ஹரீஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோர் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு உயிரிழந்ததாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.கள்ளச்சாராய விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் ஜாமினில் வெளி வந்த பின்னர், அவர் என்ன செய்கிறார் என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. இதனைக் காவல்துறை மேற்கொள்ளவில்லை. காவல்துறை கண்டு கொள்ளாது என்ற தைரியத்தில் மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்டு, இரு இளைஞர்களை கொலை செய்துள்ளதைப் பார்க்கும்போது, தி.மு.க.வினருக்கும், சாராய வியாபாரிகளுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே இரு இளைஞர்கள் உயிரிழந்ததற்குக் காரணம். இதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இது இப்படி என்றால், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உணவக உரிமையாளர் அரிவாளால் ரவுடிக் கும்பலால் வெட்டப்பட்டு இருக்கிறார்.ஒரு பக்கம் சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு மக்களை அச்சுறுத்துகிறார்கள் என்றால், மறுபக்கம் தி.மு.க. அரசே மக்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த திருப்பெயர் கிராமத்தில், தனியார் பள்ளி ஒன்றில் "பெற்றோரை கொண்டாடுவோம்" என்ற மாநாடு முதல்-அமைச்சர் தலைமையில் இந்த மாதம் 22-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்களிலிருந்து பெற்றோர்களை அழைத்து வர வேண்டுமென்றும், தனியார் பள்ளிகள் தங்கள் பங்காக ஒரு பள்ளிக்கு 20 பெற்றோர்களை அழைத்து வர வேண்டுமென்றும் தி.மு.க. அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, "பெற்றோரை கொண்டாடுவோம்" மாநாடா அல்லது "பெற்றோரை அலைக்கழிப்போம்" மாநாடா என்ற சந்தேகம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.ஏழு மாவட்டங்களிலிருந்து பெற்றோர்களை அழைத்து வர வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது பெற்றோர்களை துன்புறுத்தும் செயல். இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசின் இந்த வாய்மொழி உத்தரவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டுமென்பதோடு, இதுபோன்ற அலைக்கழிக்கும் மாநாடு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பெற்றோர்களை வெகு தூரத்திலிருந்து மாநாட்டிற்கு வரவேண்டுமென்று கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமான செயல். தி.மு.க. அரசே இதுபோன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதால்தான், வன்முறையாளர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு மக்களை அச்சுறுத்துகிறார்கள்.சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், மயிலாடுதுறையில் இரு இளைஞர்களை வெட்டி கொலை செய்தவர்களையும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உணவக உரிமையாளரை கத்தியால் குத்தியவர்களையும், உடனடியாக கைது செய்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை விரைந்து பெற்றுத் தரவும், "பெற்றோர்களை கொண்டாடுவோம்" என்ற பெயரில் "பெற்றோர்களை துன்புறுத்தும்" மாநாட்டினை ரத்து செய்யவும் முதல்-அமைச்சர் முன்வர வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை