திருமணம் செய்ய வற்புறுத்திய நர்ஸ்... காதலன் செய்த வெறிச்செயல்

பெங்களூரு, ஹாவேரி ராட்டிஹள்ளி மசூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சுவாதி( 22). ராணிபென்னுாரில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்தார். கடந்த மாதம் 3ம் தேதி காலையில் வேலைக்கு சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது, பணியை முடித்துவிட்டுச் சென்றது தெரிய வந்தது. உறவினர்கள், தோழிகள் வீட்டிற்கு சென்று விசாரித்தும், சுவாதியை பற்றி எந்த தகவலும் இல்லை.இந்த சூழலில் கடந்த 6ம் தேதி ராணிபென்னுார் அருகே பட்டேபுரா கிராமத்தில், துங்கபத்ரா ஆற்றில் ஒரு இளம்பெண்ணின் உடல் மிதந்தது. ஹலகேரி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளம்பெண்ணை பற்றிய விபரம் தெரியவில்லை. ஹாவேரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களிலும், இளம்பெண் மாயமானது குறித்து, எந்த புகாரும் பதிவாகவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில், இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதன்பின், அனாதை பிணம் என்று கருதி, இளம்பெண் உடலை போலீசார் அடக்கம் செய்தனர்.இதற்கிடையில், மகள் மாயமானதாக சுவாதியின் தந்தை ரமேஷ், கடந்த 7ம் தேதி, ராட்டிஹள்ளி போலீசில் புகார் செய்தார். இதையறிந்த ஹலகேரி போலீசார், தாங்கள் அடக்கம் செய்த இளம்பெண்ணின் அடையாளம் பற்றி கூறினர். இதன்மூலம் போலீசார் அடக்கம் செய்தது, சுவாதியின் உடல் என்று தெரிய வந்தது.இதனால் கொலையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதன்படி சுவாதிக்கும் ஹிரேகெரூர் தாலுகா ஹெல்விராப்பூர் கிராமத்தை சேர்ந்த நயாசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நயாஸ் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம் பார்க்க விரும்பி செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் எங்கு மாட்டு வண்டி பந்தயம் நடந்தாலும் அங்கு நயாஸ் சென்று வந்துள்ளார். அவ்வாறு சென்று வந்த போது அவருக்கு வினய், துர்க்காச்சாரி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்துள்ளார்.தனது காதல் விவகாரத்தையும் நயாஸ், நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். அதற்கு அவர்கள், நீங்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இதனால் எதிர்ப்பு கிளம்பும். எனவே சுவாதியுடனான காதலை கைவிடும்படி வினய், துர்க்காச்சாரி ஆகியோர் நயாசிடம் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நயாஸ், சுவாதியுடன் பேசுவதை நிறுத்தி உள்ளார். மேலும் வேறொரு இளம்பெண்ணை திருமணம் செய்ய நயாஸ் முடிவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நயாசை வலியுறுத்தி வந்துள்ளார்.இதனால் நயாஸ், வினய், துர்க்காச்சாரி ஆகியோருடன் சேர்ந்து சுவாதியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த 3-ந்தேதி தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு புறப்பட்ட சுவாதியை 3 பேரும் காரில் கடத்திக் கொண்டு ராணிபென்னூர் புறநகரில் உள்ள சுவர்ணா பூங்காவுக்கு சென்றனர். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத சமயத்தில் காரில் வைத்து 3 பேரும் சேர்ந்து துண்டால் சுவாதியின் கழுத்தை இறுக்கி மூச்சுத்திணறடித்து கொன்றுள்ளனர். அதையடுத்து சுவாதி உடலை கம்பூபுரா அருகே துங்கபத்ரா ஆற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தற்போது சுவாதியின் செல்போன் எண்களை ஆய்வு செய்த போது, நயாசிடம் அவர் அடிக்கடி பேசியிருப்பதும், கொலை நடந்த அன்றும் காலையில் நயாஸ், சுவாதி செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் இந்த வழக்கில் கொலையாளிகளை கண்டறிந்தனர். இதையடுத்து காதலன் நயாசை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வினய், துர்க்காச்சாரி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்து அமைப்பினர் கொலையாளிகளை கைது செய்ய போராட்டம் நடத்தினர். 'லவ் ஜிகாத்' என்னும் இந்து பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்யும் நடைமுறைக்கு, சுவாதி மறுத்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. மேலும் சுவாதியின் உடலை அவசரப்பட்டு அடக்கம் செய்ததாகவும் போலீசார் மீது இந்து அமைப்பினர் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
மூலக்கதை
