கட்டாய திருமணம்; கணவருக்கு காபியில் விஷம் வைத்த மனைவி மீது வழக்குப்பதிவு

  தினத்தந்தி
கட்டாய திருமணம்; கணவருக்கு காபியில் விஷம் வைத்த மனைவி மீது வழக்குப்பதிவு

லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பங்கேலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் குமார்(30). இவருக்கு கடந்த 2 ஆண்ட்களுக்கு முன்பு பிங்கி(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 25-ந்தேதி இரவு அனுஜ் குமார் தனது மனைவி பிங்கி கொடுத்த காபியை குடித்துள்ளார். அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமான நிலையில், உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுஜ் குமாரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் குடித்த காபியில் விஷம் கலந்துள்ளதாக தெரிவித்தனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அனுஜ் குமாரின் மனைவி பிங்கி தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பிங்கி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிங்கியை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி அனுஜ் குமாருடன் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. மேலும் பிங்கி வேறொரு நபரை காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு பிறகும் தனது காதலை அவர் தொடர்ந்து வந்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள பிங்கியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மூலக்கதை