தமிழ்நாடு அறிவியலில் உலகிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் - அமைச்சர் கோ.வி.செழியன் பேச்சு

  தினத்தந்தி
தமிழ்நாடு அறிவியலில் உலகிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும்  அமைச்சர் கோ.வி.செழியன் பேச்சு

சென்னை, உயர்கல்வித் துறைக்கு தேர்தெடுக்கப்பட்ட 55 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் வழங்கினார். இதன் பின்னர் நிகழ்ச்சியில், அமைச்சர் பேசியதாவது;மாணவர்களிடையே மூட நம்பிக்கைகளை அகற்றிடவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பொது மக்களிடையே குறிப்பாக மாணவ சமுதாயத்தினரிடையே பரப்புவதற்காக அறிவியல் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மாணவர்களுக்கு அறிவியல் கருத்துக்களை பரப்பும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அறிவியல் சார்ந்த போட்டிகளை ஆண்டு முழுவதும் நடத்தி வருகிறது.மேலும், அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் விதமாக பல்வேறு அறிவியல் சார்ந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. 5.01.2025 அன்று 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நடத்தப்பட்ட கணித திறனறித் தேர்வில், சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பள்ளிகளிலிருந்து 8,017 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும், 17.02.2025 மற்றும் 18.02.2025 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட தேசிய அறிவியல் தின போட்டிகளில் 112 பள்ளிகளைச் சேர்ந்த 242 மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில், 100 மாணவர்கள் பரிசுகளை வென்றுள்ளனர்.நமது தமிழ்நாடு அறிவியலில் உலகிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும். இதற்காகத்தான் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவித்தொகைகளை (ஆராய்ச்சி உதவித்தொகைகள்) அறிவியல் ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்காக வழங்கி வருகிறார். சிறந்த அறிஞர்களுக்கு (இஸ்ரோ விஞ்ஞானிகள்) பாராட்டும் பரிசுகளும் வழங்கி வருகிறார். 2025-2026-ஆம் நிதி நிலை அறிக்கையில், ரூ.100 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் அரசு பங்களிப்புடன் சென்னை அறிவியல் மையம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பிற்கான பூர்வாங்கப் பணிகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களை மேம்படுத்துவதையும் கல்விச் சூழலை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உயர்கல்வித்துறை முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் நடத்தியுள்ள அனைத்துப் போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி, அவர்கள் மேலும், மேலும் பல பரிசுகளை பெற வாழ்த்துகிறேன்."அறிவுடையார் எல்லாம் உடையார்" என்பது அய்யன் திருவள்ளுவர் வாக்கு. எனவே, அறிவியல் கண்டுபிடிப்புகளும் அறிவியல் ஆய்வுகளும் மேன்மேலும் மாணவர்களால் நிகழ்த்தப்பட வேண்டும். நமது தமிழ்நாடு அறிவியலில் உலகிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களிடையே அறிவியல் கருத்துகளை பரப்பிட வேண்டுமென இந்த விழாவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை