டெல்லி புறப்பட்ட விமானம் ராஜஸ்தானில் தரையிறக்கம்; உமர் அப்துல்லா விமர்சனம்

ஸ்ரீநகர்,ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா உள்பட 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் உள்ள ஓடுதளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றது. இதன் காரணமாக இண்டிகோ விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நிர்வாக காரணங்களால் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து நடுவானில் வட்டமடித்த விமானம் தரையிறங்க அண்டை மாநிலமான ராஜஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.அங்கு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட விமானம் பின்னர் டெல்லிக்கு புறப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் இண்டிகோ விமானம் டெல்லியில் தரையிறங்கியது. இந்த சம்பவத்திற்கு விமானத்தில் பயணித்த முதல்-மந்திரி உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார். டெல்லி விமான நிலைய நிர்வாகம் மோசமாக செயல்படுவதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.
மூலக்கதை
