நாங்கள் 6 போட்டிகளிலும் வெற்றி பெறுவோம்.. அதற்கு ஆர்சிபி.. - சிஎஸ்கே பயிற்சியாளர்

  தினத்தந்தி
நாங்கள் 6 போட்டிகளிலும் வெற்றி பெறுவோம்.. அதற்கு ஆர்சிபி..  சிஎஸ்கே பயிற்சியாளர்

சென்னை,18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் தனது சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) சரண் அடைந்தது. 7-வது ஆட்டத்தில் லக்னோவை தோற்கடித்து ஒருவழியாக வெற்றிப் பாதைக்கு திரும்பியது. ஆனால் அந்த உத்வேகத்தை நீடிக்க முடியாமல் கடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் பணிந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.இதனால் சென்னை அணிக்கு ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். இந்த இக்கட்டான சூழலில் சென்னை அணி இன்று ஐதராபாத்துடன் மோத உள்ளது.இந்நிலையில் எதிர்வரும் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். அதற்கு கடந்த சீசனில் ஆர்சிபி புளூ பிரிண்ட் அமைத்துள்ளது என்று பிளெமிங் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நாங்கள் 6க்கு 6 வெற்றிகளைப் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். சிலர் இதனை பார்த்து சிரிப்பார்கள். ஆனால் கடந்த சீசனில் ஆர்சிபி அதற்கான புளூ பிரிண்ட்டை செட் செய்துள்ளது. எனவே எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அது நடைபெறவில்லையெனில் இந்த சீசனை நாங்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்துள்ளோம். எனவே அடுத்த சில வாரங்களில் எந்தப் போட்டியும் எங்களுக்கு பயனற்றதாக இருக்காது. எங்கள் வீரர்கள் அனைவரும் அதை அறிவார்கள். இது போன்ற சூழ்நிலையில் கடந்தக் காலங்களில் நாங்கள் செய்த உழைப்பு அதற்கடுத்த வருடம் வெற்றியைக் கொடுத்துள்ளது" என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த சீசனில் முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த ஆர்சிபி அணி கடைசி 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.

மூலக்கதை