10 நாட்களில் துணை முதல்-அமைச்சராவார் உதயநிதி - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

  தினத்தந்தி
10 நாட்களில் துணை முதல்அமைச்சராவார் உதயநிதி  அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம்,தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) , காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது. தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் பவள விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக தெரிகிறது. இதனிடையே திமுக இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், திடீரென நடத்தப்பட்ட இந்த கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. .சமீபத்தில் சென்னையில் நடந்த தி.மு.க. பவள விழாவில் பேசிய முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், 'அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்-அமைச்சராக அறிவிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தி.மு.க.வில் மீண்டும் இந்த பேச்சு எழ தொடங்கியது. இதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி, எனக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுப்பது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவு எடுப்பார்' என்று கூறி இருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி துணை முதல்-அமைச்சராக அறிவிக்கப்படுவார். நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம். இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்.10 நாட்களில் துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்" என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

மூலக்கதை