'இலங்கை அதிபர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்' - திசநாயகே நம்பிக்கை

  தினத்தந்தி
இலங்கை அதிபர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்  திசநாயகே நம்பிக்கை

கொழும்பு,இலங்கையில் வரும் 21-ந்தேதி(சனிக்கிழமை) அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி(என்.பி.பி.) கட்சி சார்பில் அருரா குமார திசநாயகே ஆகியோர் அதிபர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இலங்கையின் மொத்த மக்கள் தொகையான 2.1 கோடியில் சுமார் 1.7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த உள்ளனர். நாடு முழுவதும் உள்ள 13,400 வாக்கு சாவடிகளில், வரும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு விறுவிறுப்பாக நடந்து வந்த பிரசார பணிகள், நேற்றைய தினம் முடிவுக்கு வந்தன. இந்த நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என தேசிய மக்கள் சக்தி(என்.பி.பி.) கட்சி தலைவர் அருரா குமார திசநாயகே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. தேர்தலில் வெற்றி பெற்று 22-ந்தேதி நாங்கள் ஆட்சியை அமைப்போம். வெற்றிக்குப் பிறகு என்.பி.பி. கட்சி முழுமையான நிர்வாகத்தையும், சமூக மாற்றத்தையும் கொண்டுவரும்.தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் உள்பட அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் முழுமையான ஆதரவை பெற்றுள்ளோம். கடுமையான போராட்டங்களின்போது வெறும் கனவாக மட்டுமே இருந்த உண்மையான இலங்கை அரசாங்கம், இனி நம்முடையதாக இருக்கும்" என்று தெரிவித்தார். அதே போல், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று நடைபெற்ற பிரசாரத்தில் பேசுகையில், "சர்வதேச நாணய நிதியத்தின் கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார மீட்பு நடவடிக்கை, நமது நாட்டை மற்றொரு பொருளாதார நெருக்கடியில் இருந்து தடுப்பதற்கு மிகவும் முக்கியமாகும். இலங்கை அரசு கடன்களை நம்பியிருக்காது என்பதை இளைய தலைமுறையினரிடம் நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசாவின் கொள்கைகள் மற்றொரு பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும்" என்று கூறினார்.அதே சமயம், மற்றொரு அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசா, சுமார் 20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், "செழிப்பான பொருளாதாரத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்குவோம். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகைகளை வழங்குவோம்" என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மூலக்கதை