மாது குழியில் விழுந்த விவகாரம்: இறுதிச்சடங்குக்காக மலேசியா திரும்பிய மகன்

  தமிழ் முரசு
மாது குழியில் விழுந்த விவகாரம்: இறுதிச்சடங்குக்காக மலேசியா திரும்பிய மகன்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாத் தலைநகர் கோலாலம்பூரில், ஜாலான் மஸ்ஜித் பகுதியில் உருவான ஆழ்குழியில் விழுந்த மாதுக்கு இறுதிச்சடங்கு நடத்த அவரின் மகன் மலேசியாவுக்குத் திரும்பியிருக்கிறார்.எட்டு மீட்டர் ஆழம்கொண்ட குழியில் விழுந்த திருவாட்டி ஜி. விஜயலட்சுமியின் மகனான எம். சூரியா, இந்து சமய முறைப்படி இறுதிச்சடங்கை மேற்கொண்டார். 30-நாள் சடங்குகளை முடித்து வைக்கும் கடைசி சடங்கு, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் நடந்தது.‘அம்மாவுக்கு இறுதி மரியாதை செய்கிறார்’ என்ற வார்த்தைகளைக் கொண்ட காணொளி ஒன்று டிக்டாக் தளத்தில் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 23) காணப்பட்டது. அந்தக் காணொளியில் 25 வயதாகும் திரு சூரியா, இறுதிச்சடங்கை மேற்கொள்ளும்போது தனது தாய் விழுந்த குழிக்குள் மலர்களைத் தூவும் காட்சி இடம்பெற்றுள்ளது.@sarvaessrashbinrajappa என்று டிக்டாக்கில் அழைக்கப்படுபவர் அந்தக் காணொளுயைப் பதிவேற்றம் செய்திருந்தார். சமூக ஊடகங்களில் இணையவாசிகள் திரு சூரியாவுக்குத் தங்களின் அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.தாயை இழப்பது பெரும் மன வேதனை தரும் ஒரு நிகழ்வு என்பதைத் தாங்கள் அறிவதாக இணையவாசிகள் சிலர் கூறினர். இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 48 வயது விஜயலட்சுமி, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உருவான ஆழ்குழியில் விழுந்தார். பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஒன்பது நாள்களுக்குப் பிறகு வல்லுநர்களின் அலோசனைக்கேற்ப தேடல் பணிகள் நிறுத்தப்பட்டன.

மூலக்கதை