தம்மை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு உதயநிதி வேண்டுகோள்

  தமிழ் முரசு
தம்மை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு உதயநிதி வேண்டுகோள்

சென்னை: தம்மை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு அன்போடும் உரிமையோடும் தாம் கேட்டுக்கொள்வதாக திமுக தொண்டர்களுக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திரு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு திரைப்படத் துறையினர், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திரு உதயநிதி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,” தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன். “எனினும், முதலமைச்சரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி, கழகப் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.“என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன்பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்கிறேன். நன்றி,” என விரிவாக கூறியுள்ளார்.

மூலக்கதை