லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - உ.பி.யில் சோகம்

  தினத்தந்தி
லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி  உ.பி.யில் சோகம்

மதுரா,அரியானாவில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, உத்தரபிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. அதாவது, உத்தரபிரதேசத்தின் மதுரா சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின்போது மின்கம்ப வயர்கள் அறுந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் லாரியை விட்டு வேகமாக கீழே இறங்கினர்.பதற்றத்தில் டிரைவர் லாரியை பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது பின்னால் நின்றுகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை