வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு
பெங்களூர்: இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் திங்கட்கிழமை (அக்டோபர் 21) கொட்டித்தீர்த்த கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் முக்கிய வழித்தடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தரப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. பெங்களூர் மாநகர மழைநீர் வடிகால் அமைப்பு, உள்கட்டமைப்புகள் மோசமான நிலையில் இருப்பதாக மக்கள் சமூக ஊடகங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பெங்களூரின் பழைய பகுதிகளான பசவனகுடி, மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், ஜெயநகர் போன்ற இடங்கள் பாதிக்கப்படவில்லை. அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு சரியான பகுதியில் திட்டமிட்ட பகுதிகளில் பெரிய பாதிப்பு இல்லை. அதேநேரம் ஐடி காலத்திற்கு வந்த பிறகு வளர்ந்த பகுதிகளில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.கர்நாடகத்தில் பரவலாக, அதிலும் குறிப்பாக பெங்களூர் நகர்ப்புறம், ஊரக மாவட்டங்களிலும் தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமையும் (அக்டோபர் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.