25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்து இருக்கிறோம் - பிரதமர் மோடி
புதுடெல்லி,ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் முன்வைத்த கேள்விகளுக்கு மக்களவையில் பிரதமர் மோடி பதில் அளித்து பேசியதாவது:- நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 10 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் சேவையாற்றுவதற்காக மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். 14-வது முறையாக அவையில் பேசுவதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் ஜனாதிபதி உரையில் இருந்தன. சாமானிய, நடுத்தர மக்களை முன்னேற்றிக்கொண்டு வந்துள்ளது பாஜக அரசு.ஏழை மக்களின் நிலையை அரசு புரிந்து கொண்டுள்ளது. வீடில்லாத 4 கோடி பேர் வீடு பெற்றுள்ளனர். ஏழைகள் மழைக்காலத்தில் கூரையின்றி அவதிப்படுவதை நாங்கள் உணர்ந்துள்ளோம். 5 ஆண்டுகளில் 12 கோடி இல்லங்களுக்கு குழாய்களில் குடிநீர் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் வறுமை மறைந்துள்ளது. வறுமையை ஒழித்துள்ளோம். சிலர் ஏழை மக்களின் இல்லங்களில் புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள். மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்களை கொண்டு சேர்ப்பதே அரசியல் கட்சிகளின் வேலை, கள நிலவரத்தை அறிந்தவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மாற்றம் உண்டாகிறது.மகளிரின் இன்னல்களை புரிந்ததால் நாடு முழுவதும் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன. மழைக்காலங்களில் ஏழைகள் அவதிப்படுவதால்தான் 4 கோடி மக்களுக்கு வீடு கட்ட உதவி செய்யப்பட்டுள்ளது. மக்களின் பணம் மக்களுக்காகவே என்பது தான் நம்முடைய மாடல், முந்தைய அரசுகள் ஊழலில் திளைத்துப் போயிருந்தன. இப்போதோ, பல லட்சம் கோடி ரூபாயை சேமித்தது பற்றி, மக்கள் பயனடைந்தது பற்றி பேசுகிறோம். சேமித்த பணத்தை ஆடம்பர வீடுகள் கட்ட செலவழிக்கவில்லை. பல்வேறு ஊழல்கள் பற்றிய தலைப்பு செய்திகள் வந்த காலம் உண்டு. தூய்மை இந்தியா திட்டத்தை சிலர் கிண்டல் செய்தார்கள். தூய்மை இந்தியா திட்டத்தில் கிடைத்த பழையனவற்றை விற்றதில் ரூ.2,300 கோடி கிடைத்தது.ஜன்தன் ஆதார் மொபைல் ஆகியவற்றின் மூலம் நேரடி மானியம் வழங்குவதை தொடங்கினோம். சுமார் ரூ.40 லட்சம் கோடி, மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக ஏழ்மையை அகற்றுவோம் என்ற முழக்கங்களை மட்டுமே கேட்டோம். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்து இருக்கிறோம். 25 கோடி ஏழைகள் பணக்காரர்களாக மாறியுள்ளனர். மக்களுக்கு நாம் தவறான நம்பிக்கைகளை கொடுக்கவில்லை, ஏழைகளுக்கு உண்மையான வளர்ச்சியை நாம் வழங்கி இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.