சாம்பியன்ஸ் டிராபி: பயிற்சியின்போது பந்து தாக்கியதில் இந்திய வீரருக்கு காயம்

துபாய், 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியினர் நேற்று முன்தினம் துபாய் புறப்பட்டு சென்று அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பயிற்சியின்போது இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து மைதானத்தில் நின்று கொண்டிருந்த அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டின் காலில் வேகமாக தாக்கியது. இதனால் அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து வலியால் துடித்தார். இதனையடுத்து சக வீரர்கள் மற்றும் மருத்துவ குழு விரைந்து வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஓய்வறைக்கு அழைத்து சென்றனர். அரை மணி நேரம் கழித்து மீண்டு வந்த பண்ட் பயிற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் அவர் நடக்க சற்று சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. காயத்தின் முழுமையான தன்மை குறித்து விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மூலக்கதை
