மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அபார பந்துவீச்சு.. குஜராத் 120 ரன்களில் ஆல் அவுட்

  தினத்தந்தி
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அபார பந்துவீச்சு.. குஜராத் 120 ரன்களில் ஆல் அவுட்

வதோதரா,5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் மும்பை அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியில் ஹர்லீன் தியோல் (31 ரன்கள்), காஷ்வி கவுதம் (20 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மற்ற முன்னணி வீராங்கனைகள் ஆன பெத் மூனி 1 ரன்னிலும், லாரா வோல்வார்ட் 4 ரன்களிலும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னெர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய குஜராத் அணி 10 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் அடித்துள்ளது. கடைசி பந்தில் பிரியா மிஸ்ரா ரன் அவுட் ஆனார். அபாரமாக பந்து வீசிய மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹேய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளும், நாட் ஸ்கைவர் - பிரண்ட் மற்றும் அமெலியா கெர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை களமிறங்க உள்ளது.

மூலக்கதை