சாம்பியன்ஸ் டிராபி: நிபந்தனையுடன் வீரர்களின் குடும்பத்தினரை துபாய்க்கு வர அனுமதி அளித்த பி.சி.சி.ஐ.

மும்பை, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை (19-ந் தேதி) முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.முன்னதாக அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவியதால் பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்தது.அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்துள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறைப்படி 45 நாட்களுக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது மட்டும் 2 வாரங்கள் குடும்பத்தினரை உடன் வைத்துக் கொள்ள வீரர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி 19 நாட்களில் முடிந்து விடுவதால் வீரர்களுடன் குடும்பத்தினர் செல்ல முடியாது என கூறப்பட்டது. ஆனால் தற்போது துபாய்க்கு சென்றுள்ள இந்திய அணியில் உள்ள சில மூத்த வீரர்கள் தங்களது குடும்பத்தினர் தங்களுடன் இருக்க வேண்டும் என்றும் அதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதனை பரீசிலித்த பி.சி.சி.ஐ. நிபந்தனையுடன் இந்திய வீரர்களுக்கு சலுகை வழங்கி உள்ளது.அதன்படி வீரர்கள் தங்களது குடும்பத்தினரை ஏதாவது ஒரு போட்டிக்கு மட்டும் அழைத்துச் செல்லலாம் என்றும் அந்த ஒரு போட்டியோடு அவர்கள் திரும்பி விட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. அதுமட்டும் இன்றி குடும்ப உறுப்பினர்கள் எந்த போட்டிக்கு முன்பாக வர இருக்கிறார்கள் என்பதை முறையாக தெரிவித்து அனுமதி பெற்ற பிறகே அங்கு செல்ல வேண்டும் என்றும் அப்படி உரிய அனுமதியுடன் சென்றால் ஒருநாள் வீரர்களுடன் இருக்க குடும்பத்தாருக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
