ஆத்தூர் அருகே இரட்டை கொலை சம்பவம்: சேலம் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு

சேலம்,சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அசோக்குமார் (வயது 40) இவரது மனைவி தவமணி (வயது38). இந்த தம்பதிக்கு வித்யதாரணி (வயது13), அருள்பிரகாஷ் (வயது 5), அருள்குமாரி ( வயது 10) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.இந்த தம்பதியின் வீட்டிற்கு இன்று காலை உறவினர்கள் சென்றபோது, அங்கு தவமணி மற்றும் மூன்று குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் வீட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மூவரும் ரத்த காயங்களுடன் வெட்டுப்பட்டு இருந்த நிலையில், குழந்தைகளான அருள்பிரகாஷ், வித்யதாரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. தவமணி மற்றும் குழந்தை அருள்குமாரியை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து, ஆத்தூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான ஆத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான கூலித் தொழிலாளி அசோக்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கணவன் -மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மனைவி, குழந்தைகளை கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், இந்த சம்பவம் நடந்த இடத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி. கவுதம் கோயல் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் நிகழ்விடத்தில் தடயவியல் துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.
மூலக்கதை
