பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட விவகாரம்: 5 பேர் மீது வழக்குப்பதிவு

  தினத்தந்தி
பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட விவகாரம்: 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை,மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை மற்றும் அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை ஏற்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மும்மொழிக் கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தெரிவித்து திமுக போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதேபோல, அதிமுக, விசிக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுகவை சேர்ந்த 5 பேர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்தனர். தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் 'பொள்ளாச்சி சந்திப்பு' என எழுதப்பட்டு இருந்த நிலையில், நடுவில் இருந்த இந்தி எழுத்தை மட்டும் அவர்கள் அழித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு சென்ற ரெயில்வே போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, 3 மணி நேரத்தில் இந்தி எழுத்துக்களை அழித்த அதே பெயர் பலகையில் மீண்டும் இந்தியில் பெயர் எழுதப்பட்டது. பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவை சேர்ந்த 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் பாலக்காடு ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை