தொகுதி மறுவரையறை: "கர்நாடகா முதல்-மந்திரி எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்" - அமைச்சர் பொன்முடி

பெங்களூரு, சென்னையில் வரும் மார்ச் 22ம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தி.மு.க.வைச் சேர்ந்த குழுவினர் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் பெங்களூருவில் கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். மேலும், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரையும் இந்தக் குழுவினர் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.இந்த சந்திப்புக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாடு முதல்-அமைச்சர் சார்பில் கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்தோம். இருவரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். சென்னையில் நடைபெற இருக்கும் கூட்டத்திற்கு இருவருமே கண்டிப்பாக வருவார்கள்" என்று அவர் கூறினார். அமைச்சர் பொன்முடி, எம்.பி அப்துல்லா ஆகியோர் வருகைக்கு முன்பாக, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுடன் தொலைபேசி வாயிலாகப் பேசினார். இதையடுத்து, அவர் சார்பாக சென்ற தி.மு.க. குழுவுடன் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
