திறந்த இரண்டே நாட்களில் மாயமான அம்பேத்கர் சிலை - விசாரணை தீவிரம்

  தினத்தந்தி
திறந்த இரண்டே நாட்களில் மாயமான அம்பேத்கர் சிலை  விசாரணை தீவிரம்

சத்தார்பூர், மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாரி கிராமத்தில் கடந்த 11-ந்தேதி அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட்டது. 1.5 அடி உயரம் உடைய இந்த கற்சிலையை உத்தரபிரதேசத்தில் இருந்து அந்த கிராமத்தினர் வாங்கியிருந்தனர்.இந்த சிலையை நேற்று காலையில் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதை பெயர்த்து எடுத்து சென்றிருந்தனர். இது குறித்த தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கே குவிந்தனர். பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்து, மாயமான சிலையையும், அதை திருடிச்சென்றவர்களையும் தேடி வருகின்றனர். இதுகுறித்து அம்மாவட காவல் கண்காணிப்பாளர் வேதிதா தாகர் கூறுகையில், "அம்பேத்கர் சிலையை திருடியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். தீவிர விசாரணை நடந்து வருகிறது. அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார். இது தொடர்பாக அப்பகுதி ஊராட்சித் தலைவர் ஆசாராம் அகிர்வார் கூறுகையில், "கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி உத்தர பிரதேசத்தில் இருந்து அம்பேத்கர் சிலையை வாங்கி வந்தனர். நிறுவிய இரண்டு நாட்களில் சிலை திருடுபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின்பேரில் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று அவர் கூறினார். திறக்கப்பட்ட 2 நாட்களில் அம்பேத்கர் சிலை மாயமான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை