விஜய்யின் உதவியாளர் மகனுக்கு கொடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவி

சென்னை, தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டுள்ளது. தற்போது கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை விஜய் முழு வீச்சில் செய்து வருகிறார். இதன்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் படிப்படியாகக் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 95 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் இன்று 6-வது கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டார். பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தியநிலையில், 19 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக விஜய்யின் உதவியாளர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திரன் விஜய்யின் ஓட்டுநராக இருந்து உதவியாளராக உயர்ந்தவர். இவர் விஜய் உடன் 40 ஆண்டுகளாக தொடர்ந்து உடனிருந்து வருகிறார். ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் 21 வயதிலேயே விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்தவர். அதன்பின் 6 ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் இயக்கப் பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். இதன் காரணமாகவே சபரிநாதனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
மூலக்கதை
