ராஜஸ்தான்: ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக, ஐந்து மாத இரட்டை மகள்களை கொலை செய்த நபர் கைது

ஜெய்ப்பூர்,ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியை சேர்ந்த அசோக் யாதவ் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். அவருக்கு மனைவி மற்றும் 5 மாதங்களே ஆன இரண்டு மகள்கள் இருந்தனர். இந்த நிலையில் அசோக் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு ஆண் குழ்ந்தை வேண்டும் என விரும்பினர். ஆனால் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகளே பிறந்தனர்.இதனால் தம்பதிகளிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் அசோக் யாதவ், முதலில் அவரது மனைவியை அடித்தார். பின்னர் ஆத்திரத்தில் இரண்டு மகள்களையும் தூக்கி தரையில் வீசினார். இதில் சிறுமிகள் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதன் பின்னர் அசோக் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் இறந்த குழந்தைகளை அடக்கம் செய்தனர். மேலும் அடக்கம் செய்த இடத்தை கற்கள் மற்றும் புதர்கள் வைத்து மறைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் தாய் மாமா சுனில் யாதவ் கோட்வாலி காவல் நிலையத்திற்கு போன் செய்து. சிறுமிகளின் தந்தை அவர்களை கொன்று, 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் புதைத்து வைத்திருப்பதாக தகவல் தெரிவித்தார்.இந்த நிலையில் தகவலறிந்த போலீசார் இன்று காலை புதைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிகளின் தந்தை அசோக் யாதவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
