அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்.. உருக்குலைந்த கட்டிடங்கள்: மியான்மரில் 20 பேர் பலி

  தினத்தந்தி
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்.. உருக்குலைந்த கட்டிடங்கள்: மியான்மரில் 20 பேர் பலி

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.மியான்மர் மற்றும் தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம் குறித்து இந்திய பிரதமர் மோடி தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார். மக்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ள அவர், அந்த அரசுகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று அறிவித்துள்ளார். மேலும், உதவிப் பணிகளுக்காக இந்திய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலக்கதை