மக்களை பற்றி அரசுக்கு கவலை இல்லை - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரமும், துறைரீதியான மானியக் கோரிக்கை விவாதமும் நடந்து வருகிறது. அப்போது மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.கவன ஈர்ப்பு தீர்மானம் முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். இதையடுத்து சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு இன்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அவையின் மரபின்படி அறிவிப்பே கொடுக்காமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த நிலையில் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-மக்கள் பிரச்சினைகளை கூறுவதே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் இன்று மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை. மக்களை பற்றி அரசுக்கு கவலை இல்லை. குடும்பத்தைப் பற்றி மட்டுமே தி.மு.க. அரசு கவலை கொள்கிறது. உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக பேச சட்டசபையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.காவலரையே கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் வியாபாரிகள் தைரியம் பெற்றுள்ளனர். போதைப்பொருளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை சுதந்திரமாக விற்பனை செய்கின்றனர். காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும். தி.மு.க. ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.இன்றைய தினம் எங்களை திட்டமிட்டு சட்டசபையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார். எவ்வளவு முக்கியமான பிரச்சினையாக இருந்தாலும் துணை முதல்வரின் பதிலுரை தடை படக்கூடாது என்று நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
