அடுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கான பந்தயம்: முந்துவது யார்.? வெளியான பரபரப்பு தகவல்

  தினத்தந்தி
அடுத்த தமிழ்நாடு முதல்அமைச்சருக்கான பந்தயம்: முந்துவது யார்.? வெளியான பரபரப்பு தகவல்

புதுடெல்லி, தமிழ்நாட்டில் அடுத்த முதல்-அமைச்சர் யார் என்பது குறித்து சி வோட்டர் நிறுவனம் இந்தியா டுடே நிறுவனத்துடன் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.அந்த கருத்து கணிப்பின்படி தற்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 27 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.புதிதாக கட்சி தொடங்கி முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் 2026-ல் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 18 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு இந்த பட்டியலில் மூன்றாவது இடமே கிடைத்துள்ளது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த அக்கட்சியின் தலைவர் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 10 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டில் தாமரையை மலரவைக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ள பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக 9 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கட்சி தொடங்கி ஓர் ஆண்டுகாலமே ஆகி உள்ள நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதபொருளாக மாறி உள்ளது. மேலும் இந்த கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது..? என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழ்நாடு அரசின் செயல்பாடு மிகவும் திருப்தியாக உள்ளது என 15 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆளும் தி.மு.க. அரசின் ஆட்சி ஓரளவு திருப்தியாக உள்ளது என 36 சதவீதம் பேர் கூறியுள்ளனர். திருப்தி இல்லை என்று 25 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் எந்த கருத்துக்கும் வர முடியாதவர்கள் 24 சதவீதம் பேர் உள்ளனர்.தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என கேட்கப்பட்டதற்கு 22 சதவீதம் பேர் "நன்றாக உள்ளது" என்றும், 33 சதவீதம் பேர் "ஓரளவுக்கு திருப்தி" என்றும் தெரிவித்தனர். இதற்கிடையில், 22 சதவீதம் பேர் "எந்த விதத்திலும் திருப்தி அடையவில்லை" என்றும், 23 சதவீதம் பேர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். ஸ்டாலின் மிகவும் விரும்பப்படும் தலைவராக இருந்தாலும், அவரது ஆட்சியில் பொதுமக்களின் திருப்தி கலவையாக இருப்பதை இது காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்திறன் குறித்த பொதுமக்களின் கருத்தையும் இந்த கணக்கெடுப்பு பிரதிபலித்தது. அதன்படி 8 சதவீதம் பேர் மட்டுமே "மிகவும் திருப்தி" என்றும், அதே நேரத்தில் 27 சதவீதம் பேர் "ஓரளவுக்கு திருப்தி" என்றும், இதற்கு நேர்மாறாக, 32 சதவீதம் பேர் "எந்த விதத்திலும் திருப்தி அடையவில்லை" என்றும், 33 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமைக்கு வலுவான விருப்பம் இருப்பதாக இந்த கருத்து கணிப்பு முடிவுகள் குறிப்பிடுகின்றன, அவருக்கான மதிப்பீடு மற்ற போட்டியாளர்களை விட கணிசமான அளவில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும், விஜய் இரண்டாவது இடத்தில் இருப்பது நடிகரின் அதிகரித்து வரும் அரசியல் ஈர்ப்பை எடுத்துக்காட்டுவதக உள்ளது. இருப்பினும் அவரது கட்சி இன்னும் முறையான தேர்தலில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தங்கள் வாக்குகளைப் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து கேட்டபோது, பதிலளித்தவர்கள் பெண்களின் பாதுகாப்பை 15 சதவீதம் பேர் முக்கிய கவலையாக குறிப்பிட்டனர், அதைத் தொடர்ந்து 12 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு. 10 சதவீத வாக்காளர்கள் போதைப்பொருள் மற்றும் மது அருந்துதல் ஒரு முக்கிய பிரச்சினையாக அடையாளம் காட்டி உள்ளனர். அதே நேரத்தில் வேலையின்மை 8 சதவீதம் பேர் மேற்கோள் காட்டினர்.சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் குறித்த பொதுமக்களின் கருத்தும் இதேபோல் பிரிக்கப்பட்டது. பதிலளித்தவர்களில் 16 சதவீதம் பேர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் "மிகவும் திருப்தி அடைவதாகக்" கூறியிருந்தாலும், 32 சதவீதம் பேர் "ஓரளவுக்கு திருப்தி என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், 25 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்தனர், 27 சதவீதம் பேர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழக அரசியலில் மு.க.ஸ்டாலின் ஆதிக்கம் செலுத்தும் தலைவராக இருந்தாலும், ஆட்சி குறித்த பொதுமக்களின் கவலைகள் அதிகரித்து வருவதும், தீவிர போட்டியாளராக விஜய் எதிர்பாராத விதமாக உயர்ந்திருப்பதும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மாநில அரசியல் சூழலை மாற்றியமைக்கக்கூடும் என்று கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை