த.வெ.க. தலைவர் விஜய் பேச்சுக்கு சீமான் திடீர் ஆதரவு

  தினத்தந்தி
த.வெ.க. தலைவர் விஜய் பேச்சுக்கு சீமான் திடீர் ஆதரவு

திருச்சி,திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என சி.ஓட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு 36 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். ஆனால், எங்கள் கட்சி அந்த கருத்துக்கணிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை. இதிலிருந்து கருத்துக்கணிப்பின் நேர்மை புலப்படுகிறது. இது கருத்துக்கணிப்பல்ல.. கருத்து திணிப்பு.நாங்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல, போராளிகள் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டு தி.மு.க.வை வீழ்த்துவேன் என்ற விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். நான் பிரபாகரனை போல தனித்தே நின்று போட்டியிடுவேன். நான் புலி போன்றவன் தனித்தே நின்று போட்டியிடுவேன். ஆனால் கூட்டணி வைத்தால்தான் எதிரியை தேர்தலில் வெல்ல முடியும் என்பது சட்டமா அல்லது ஏதேனும் மரபா?.. கூட்டணி இல்லாமல் எப்படி என கேட்பவர்கள், கொள்கை இல்லாமல் எப்படி என கேட்பதில்லை.படை சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பவன் அல்ல நான். கூட்டத்தில் ஒரு ஆளாக போட்டியிட துணிவோ, வீரமோ தேவையில்லை, தனித்து நிற்கவும் தான் துணிவும் வீரமும் தேவை. எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம். எந்த குழப்பமும் இல்லை தடுமாற்றமும் இல்லை. இன்னும் 4 மாதத்தில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரிந்து விடும். தேர்தலில் நாங்கள் வாங்கப்போவது தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு அல்ல, மக்களின் ஓட்டு தான்" என்று அவர் கூறினார்.

மூலக்கதை