காஷ்மீர் தாக்குதல்: காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லீம்கள்தான் - மெகபூபா முப்தி

  தினத்தந்தி
காஷ்மீர் தாக்குதல்: காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லீம்கள்தான்  மெகபூபா முப்தி

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறினாலும், தாக்குதலில் ஈடுபட்ட சிலர் எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை தங்கள் ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது காஷ்மீர் முஸ்லீம்கள்தான் என்று ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளை மீட்டதுடன், மருத்துவமனையில் அவர்களுக்கு தங்கள் ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது காஷ்மீர் முஸ்லீம்கள்தான். அதன்பிறகுதான் சம்பவ இடத்துக்கு ராணுவமும், பாதுகாப்புப்படைகளும், அரசும் உதவ வந்தன.காயமடைந்தவர்களை மைல்கணக்கில் நடந்துசென்று காப்பாற்றிய சஜ்ஜாத் பற்றியோ, டாக்சி ஓட்டுநர் பற்றியோ, காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த ஆதில் ஷா பற்றியோ பலரும் பேசவில்லை. காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லீம்கள்தான். இவர்கள் அனைவரும் காஷ்மீரிகள். நாங்கள் (காஷ்மீரிகள்) பயங்கரவாதிகள் அல்ல, பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது. நாட்டின் பல பகுதிகளில் முஸ்லீம்கள் கொடூரமாகத் தாக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. அதற்காக ஒவ்வொரு இந்துவும் தாக்குதல் நடத்துவதாக சொல்லமுடியாது" என்று அவர் தெரிவித்தார்.

மூலக்கதை