துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்தது அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது - கவர்னர் ஆர்.என். ரவி

பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பது மற்றும் நீக்குவதற்கான அதிகாரம் உள்பட பல்கலைக்கழகங்கள் தொடர்பாக கவர்னரிடம் இருந்த அதிகாரங்களை தமிழக அரசுக்கு மாற்றம் செய்யும் 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. 10 மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் ஊட்டி கவர்னர் மாளிகையில் 2 நாட்கள் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று தொடங்கி வைத்தார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து, துணை வேந்தர்களுடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்திய நிலையில் கவர்னரும் துணை வேந்தர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே துணை வேந்தர்கள் மாநாடு விவகாரத்தில், 'தமிழக அரசுடன் மோதல் இல்லை' என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது.இந்த நிலையில் இந்த மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுக்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார் என்று கவர்னர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-முதல்-அமைச்சர் ஸ்டாலின் காவல்துறையைப் பயன்படுத்தி, இன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. மாநில உயர்கல்வி அமைச்சர், துணை வேந்தர்களிடம் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது பலனளிக்காத நிலையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார்.மாநாட்டு நாளில் ஒரு துணைவேந்தர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஊட்டியை அடைந்த மற்றவர்கள் தங்கிய விடுதிகளின் அறை கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்றும், மாநாட்டில் கலந்து கொண்டால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது காவல்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம் ஆகும்!இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? அல்லது தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் மாநில பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதன் விளைவுகள், எந்தவொரு தர மேம்பாடும் மாணவர்களை ஆர்வமுள்ளவர்களாகவும், ஊக்கமளிப்பவர்களாகவும் மாற்றும் என்பதால் இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
