புனேயில் வெளுத்து வாங்கும் மழை.. தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்: 4 பேர் பலி

  தினத்தந்தி
புனேயில் வெளுத்து வாங்கும் மழை.. தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்: 4 பேர் பலி

புனே:மராட்டிய மாநிலம் புனே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. புனே நகரம் மற்றும் புனே மாவட்டத்தின் வெல்ஹா, முல்ஷி, போர் ஆகிய தாலுகாக்கள் மற்றும் கடக்வாஸ்லா உள்ளிட்ட பல அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். புனே மாவட்டத்தில் இன்றும் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் மழை தொடர்பான விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, புனேயின் டெக்கான் பகுதியில் தள்ளுவண்டியை நகர்த்த முயன்றபோது மின்சாரம் தாக்கி 3 பேரும், முல்ஷி தாலுகா தாமினி காட் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒருவரும் இறந்துள்ளனர்.வெள்ளம் சூழலாம் என எதிர்பார்க்கப்படும் தாழ்வான பகுதிகளில், பேரிடர் மேலாண்மை குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi

மூலக்கதை