இழிவான கருத்துகள்: மூட நம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு கைது

  தமிழ் முரசு
இழிவான கருத்துகள்: மூட நம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு கைது

சென்னை: மூடநம்பிக்கை சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக, ஆஸ்திரேலியாவிருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை சைதாப்பேட்டை காவல்துறையினர் சனிக்கிழமை (செப்டம்பர் 7) கைது செய்தனர்.ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனரான மகா விஷ்ணு மீது, மாற்றுத் திறனாளிகளை இழிவாகப் பேசியதாக திருவெற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகாரை மாற்றுத்திறனாளி அமைப்பினர் அளித்தனர். அதனால், ஆஸ்திரேலியாவில் இருந்த அவரை சென்னை திரும்பியதும் விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்ய காவல்துறை திட்டமிட்டது.சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் சென்னை விமான நிலையத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர். சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளி, சைதாப்பேட்டை மாந்தோப்பு மாடல் பள்ளிகளில் தன்னம்பிக்கை விழிப்புணர்வு என்ற பெயரில் பேசவந்த மகாவிஷ்ணு, மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக சமூக ஊடகத்தளங்களில் கண்டனங்கள் பெருகி வருகின்றன. இதனை அடுத்து அவர்மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார் அளித்திருந்தனர். அதேபோல குமர்நகர் காவல்நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரைப் பெற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், காணொளிப் பதிவு ஒன்றை மகாவிஷ்ணு வெளியிட்டுள்ளார். அதில், “நான் எங்கும் தப்பி ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளியும் அளவுக்கு நான் என்ன கருத்துகள் கூறிவிட்டேன். எனது ஆஸ்திரேலியா பயணம் திட்டமிட்ட பயணம். 8 நாள்களுக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். நாளை (சனிக்கிழமை) சென்னை வருவேன்,” என அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மூலக்கதை