வலைப்பந்து இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர்; கோல்காப்பாளர் மிஷாலினி அசத்தல்

  தமிழ் முரசு
வலைப்பந்து இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர்; கோல்காப்பாளர் மிஷாலினி அசத்தல்

மிர்சஸ் நேஷன்ஸ் கிண்ண வலைப்பந்துப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு சிங்கப்பூர்க் குழு தகுதி பெற்றுள்ளது.இதற்கு அவ்வணியின் கோல்காப்பாளராகக் களமிறங்கிய கே. மிஷாலினி முக்கிய காரணமாக அமைந்தார்.இந்தப் போட்டியில் இதுவே அவரது அறிமுக ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற உலகத் தரவரிசையில் 21வது இடத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசுகள் அணியைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் சிங்கப்பூர் வீராங்கனைகளுக்கு ஏற்பட்டது.இந்த ஆட்டம் செப்டம்பர் 6ஆம் தேதியன்று ஓசிபிசி அரீனா மண்டபத்தில் நடைபெற்றது.22 வயது மிஷாலினியின் அபார ஆட்டம் எதிரணியின் தாக்குதல்களை முறியடித்தது.இறுதியில் 68-47 எனும் புள்ளிக் கணக்கில் உலகத் தரவரிசையில் 25வது இடத்தில் உள்ள சிங்கப்பூர்க் குழு வாகை சூடியது.இறுதி ஆட்டம் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது.இதில் சிங்கப்பூரும் கென்யாவும் மோதுகின்றன.“ஐக்கிய அரபு சிற்றரசுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறக்கப்படுகிறேன் என்று தெரியவந்தபோது நான் ஆச்சரியப்படவில்லை. களமிறங்க மனதளவில் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று எங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. “எதிரணியின் அணுகுமுறை, விளையாடும் விதம் போன்றவை ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ளக் கற்றுக்கொண்டோம்,” என்றார் மிஷாலினி.

மூலக்கதை