‘மூடநம்பிக்கைகளுக்கு புத்துயிரூட்டுவதைத் தடுக்க சமூக சீர்திருத்தத் துறை வேண்டும்’

  தமிழ் முரசு
‘மூடநம்பிக்கைகளுக்கு புத்துயிரூட்டுவதைத் தடுக்க சமூக சீர்திருத்தத் துறை வேண்டும்’

சென்னை: தமிழ்நாட்டில் வழக்கொழிந்து வரும் மூட நம்பிக்கை, பழக்கவழக்கங்களுக்குப் புத்துயிரூட்டி வளர்த்தல், பழமைவாதக் கருத்துகளைப் பரப்புதல் ஆகிய செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது வருத்தத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதி, மதம் தொடர்பான கற்பிதங்களும் அறிவியல் முலாம்பூசி, நூறாண்டுகள் வளர்த்துப் பாதுகாத்து வரும் பகுத்தறிவுச் சிந்தனையைச் சீர்குலைக்கும் வகையில் பேராபத்து உருவாகி வருகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.கல்வி நிலையங்களில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில் மூட நம்பிக்கைக் கருத்துகளைப் பரப்பும் செயல்கள் தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன. இதற்கு அரசு சார்ந்த கல்வி நிலையங்களும் விதிவிலக்கில்லை என்பது வேதனைக்குரியது என்று முத்தரசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.ஊடகங்கள் இன்றைக்கு மின்னணு வடிவில் பல பரிமாணங்களில் உருவெடுத்து, குழந்தைகள் முதல் முதியோர் வரை பயன்படுத்தும் தவிர்க்க முடியாத சாதனமாகியுள்ளது.அதிகார மையத்தில் செல்வாக்கு செலுத்தும் பன்னாட்டுக் குழும நிறுவனங்களும், நிதி மூலதன சக்திகளும், மத்திய அரசில் அதிகாரத்தில் அமர்ந்துள்ள வகுப்புவாத வலதுசாரி சக்திகளின் துணையோடு சமூகப்பிளவை நிரந்தமாக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆன்மிகவாதி என்ற பெயரில் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி ஆலயங்களிலும், வழிபாட்டு மையங்களிலும் மக்களைத் திரட்டி, தவறாக வழிநடத்துகின்றனர். இந்தச் சூழ்நிலையில் சமூக விழிப்புணர்வு இயக்கத்தை, தமிழ்நாடு அரசு முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.சமூக சீர்திருத்த, அறிவியல் கருத்துகளை விரிவாக மேற்கொள்ள ஒரு சிறப்புத் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்திட தனித்துறையை உருவாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தமிழ்நாடு அரசையும் குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை