ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்

  தமிழ் முரசு
ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்

ஜெருசலம்: தாங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையது ஹசான் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28) தெரிவித்தது.ஹிஸ்புல்லாவும் அதை உறுதிப்படுத்தியது.லெபனான் தலைநகர் பெய்ருட் மீது வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 27) தாங்கள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டது. “ஹசான் நஸ்ரல்லா மாண்டுவிட்டார்,” என்ற பொருள் தரும் ஆங்கில வார்த்தைகளை இஸ்ரேல் ராணுவத்தின் பேச்சாளரான லெஃப்டினண்ட் கர்னல் நடாவ் ‌ஷொ‌ஷானி எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார். மற்றொரு ராணுவப் பேச்சாளரான கேப்டன் டேவிட் அவ்ரஹாம், ஸசான் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார். வெள்ளிக்கிழமை மாலை முதல் நஸ்ரல்லாவுடன் தொடர்புகொள்ள முடியாமல் போனது என்று ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு நெருங்கிய ஒருவர் முன்னதாக ஏஎஃப்பியிடம் தெரிவித்திருந்தார். தனது அடையாளத்தை வெளியிடக்கூடாது என்று தகவல் தெரிவித்த அந்நபர் நிபந்தனை விடுத்திருந்தார்.இதற்கு முன்பு 2006ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே நடந்த போரில் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக வதந்திகள் எழுந்தன; ஆனால் எவ்விதப் பாதிப்புமின்றி நஸ்ரல்லா உயிருடன் இருப்பது பின்னர் தெரியவந்தது என்று அவர் சொன்னார்.தாங்கள் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் பல்வேறு தளபதிகள் மாண்டுவிட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நஸ்ரல்லா, பல ஆண்டுகளாக இஸ்ரேலுடன் இருந்துவரும் பூசலில் ஹிஸ்புல்லா அமைப்பை வழிநடத்தியவர் ஆவார். மேலும், ஹிஸ்புல்லா வட்டார அளவில் சக்திவாய்ந்த ராணுவ அமைப்பாக உருமாறியதற்கு அவர் முக்கியப் பங்கு வகித்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை