சிறு ‘ஏடிஎம்’களாகச் செயல்படவிருக்கும் நியாய விலைக் கடைகள்

  தமிழ் முரசு
சிறு ‘ஏடிஎம்’களாகச் செயல்படவிருக்கும் நியாய விலைக் கடைகள்

சென்னை: தமிழக மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்க இனி தானியங்கி வங்கி இயந்திரத்தைத் (ஏடிஎம்) தேடி ஓட வேண்டியிராது.நியாய விலைக் கடைகளிலேயே (ரேஷன் கடைகள்) அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை எடுக்க ஏதுவாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் அரசி, பருப்பு போன்ற பொருள்கள் விற்கப்பட்டு வருகின்றன. பொங்கல் திருநாளின்போது அரிசி, கரும்பு, இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவையும் நியாய கடைகள் மூலம் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இனி வங்கிக்கோ, ஏடிஎம் இயந்திரத்தையோ நாடிச் செல்லாமல், மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நியாய விலைக் கடைகள் மூலமாகவே பெற்றுக்கொள்வதற்கு தமிழ்நாடு கூட்டுறவுத் துறை திட்டமிட்டு வருகிறது. இது, ஏடிஎம், வங்கிக்குச் செல்லமுடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவியாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதன்படி, முக்கிய வங்கிச் சேவைகளை வழங்கும் மின்னிலக்கக் கருவிகள் நியாய விலைக் கடைகளில் நிறுவப்படும். அதற்கென தனியாக ஒருவர் பணியமர்த்தப்படுவார் என்றும் அச்சேவையை வழங்குவதற்கான நியாய விலைக் கடைகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை